கும்மிடிப்பூண்டியில் மேலும் 40 டன் ராக்கெட் குண்டுகள் சிக்கியது
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் மேலும் ஏராளமான ராக்கெட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று நடந்த சோதனையில் 40 டன் ராக்கெட் குண்டுகள் சிக்கின.
கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழில் வளாகம் அருகே, கடந்த 7ம் தேதி இலங்கை அகதிகள் முகாமையொட்டியுள்ள பாழடைந்த கிணற்றில் மூட்டை மூட்டையாக ராக்கெட் குண்டுகள், கண்ணிவெடிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தீவிர சோதனையும், கண்காணிப்பும் நடந்து வருகிறது. இங்கு பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள், அமெரிக்காவிலிருந்து ஸ்கிராப் ஆக வந்தவையாகும். அனைத்தும் ஈராக் உள்ளிட்ட போர்களில் பயன்படுத்தப்பட்டவை.
இந்த நிலையில் சிப்காட் வளாகத்தில் 12க்கும் மேற்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஜேசிபி இயந்திரம் மூலம் பூமியைத் தோண்டிப் பார்த்தனர். அப்போது 40 டன் ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் சிக்கின.
இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் கூறுகையில், சிப்காட் வளாகத்தில் உள்ள 17 தொழிற்சாலைகளின் அதிபர்களும் எங்களுக்கு முழுஒத்துழைப்பு அளித்தனர். அதன் அடிப்படையில் பூமியைத் தோண்டிப் பார்த்தோம். அப்போது 40 டன் ராணுவத் தளவாடங்கள் சிக்கின.
அனைத்தும் பயன்படுத்தப்பட்ட, ஸ்கிராப் ஆகும். இவற்றில் எதுவுமே வெடிக்கும் தன்மையில் இல்லை.அனைத்துமே பழைய ராக்கெட் குண்டுகள், துப்பாக்கி குண்டுகள் ஆகும்.
இவற்றை ராணுவத்திடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம். இவற்றில் 1930ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களும் அடக்கம்.
இதுதொடர்பாக யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட மாட்டாது என்றார்.