3வது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்: சரத்குமார்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக, அதிமுக அல்லாத 3வது அணி விரைவில் தமிழகத்தில் உருவாகும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் பாமகவின் வாக்குகளை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது திமுக. இப்போது பாமகவை அது நீக்கியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை நீக்கியிருப்பது வருத்தத்திற்குரியது. மீண்டும் இத்தொகுதியை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
கக்கன் மணி மண்டபத்தில் அஞ்சலி:
முன்னதாக, மறைந்த அமைச்சர் கக்கனின் மணிமண்டபத்தில் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்.
அரசியலில் நேர்மைக்கு மறு பெயர் என்று பெயர் பெற்றவர் முன்னாள் அமைச்சர் கக்கன். காமராஜரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்.
அவரது 99 வது பிறந்த நாள் தினம் சொந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைபட்டியில் கொண்டாடப்பட்டது.
மணிமண்டபத்தில் கிராம மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்.
அதே போன்று மதுரையில் நீதி மன்றம் அருகில் உள்ள கக்கன் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக சேவர்கள் என பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.