தமிழையே பயன்படுத்துங்கள்-கலெக்டர்களுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மொழிக் கொள்கையாகக் கொண்டுள்ள இந்த அரசின் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு ஒத்துழைப்பு தரும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டங்களிலும் கடிதப் போக்குவரத்திலும் தமிழையே பயன்படுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
மாநிலங்களுக்குள் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ், நிலம் கையகப்படுத்த வேண்டிய இனங்களில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மாவட்ட கலெக்டர்கள் அழைத்துப் பேசி எந்தவித இடையூறும் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ மனைகளில் அவ்வப்போது கலெக்டர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு மருத்துவர்கள் பணியில் இருப்பதையும், உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவில் இருப்பு உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்று கலெக்டர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
வறுமையில் வாடும் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் திருமணத்திற்கென நிதியுதவி பெறவும், பெண்களின் கல்வி நிலையினை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளுக்கு நிதியுதவி தங்குதடையின்றி கிடைக்க கலெக்டர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு மாணவர் விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கான உணவுக் கட்டணம் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்குத் தரமான உணவு வழங்கப்படுவதை கலெக்டர்கள் உறுதி செய்திட வேண்டும். அரசு மாணவர் விடுதிகளை அடிக்கடி நேரில் ஆய்வு செய்து விடுதி மற்றும் பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையைச் சரிபார்த்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய விடுதிகளைக் கட்டுவதற்குத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்திட வேண்டும்.
தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பை (Backbone connectivity) உருவாக்கி, அதன்மூலம் அனைத்து மாவட்டங்கள், வட்டத் தலைமையிடங்கள், வட்டாரத் தலைமையிடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டத்தினைச் செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடுதான்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மொழிக் கொள்கையாகக் கொண்டுள்ள இந்த அரசின் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், நீங்கள் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களிலும் கடிதப் போக்குவரத்துகளிலும் தமிழையே பயன்படுத்த வேண்டும்.
கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் மக்களால் எளிதில் அணுகத்தக்கவர்களாகவும், மக்களுடைய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும் தன்மை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கும், அரசுக்கும் இடையே ஒரு நல்லுறவுப் பாலமாக நீங்கள் திகழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
நம்மிடத்திலே இருக்கின்ற திறமை, நமக்காக அல்ல, நாட்டு மக்களுக்காக என்று நினைத்து ஒவ்வொருவரும் பணியாற்றுவோம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications