திமுக எம்எல்ஏ வீட்டில் அடிதடி, ரகளை!
திண்டுக்கல்: பழனியில் தொழிலாளர்களிடம் மனு வாங்க மறுத்த திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வீட்டில் அடிதடி ரகளை ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் கடந்த 2002 ம் ஆண்டு தற்காலிக பணியாளர்கள் 63 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்ய நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், கமிஷினர் சுகன்யா பாய் ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
ஆனால் நியமனக் குழு உறுப்பினர் பத்மினி 63 பேரை பணி நியமனம் செய்ய மறுத்து விட்டார்.
இதனால் நேற்று 63 பேரும் சிஐடியூ அமைப்பாளர் பிச்சை முத்து தலைமையில் மனு கொடுக்க பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வீட்டிற்கு சென்றனர். ஆனால் எம்.எல்.ஏ. மனு வாங்க மறுத்து, தூங்க சென்று விட்டார்.
ஆனால் எம்.எல்.ஏ. வீட்டை விட்டு வெளியே செல்ல மறுத்த தொழிலாளர்கள் எம்.எல்.ஏ. வீட்டு காலிங் பெல்லை தொடர்ந்து அழுத்திக் கொண்டு இருந்துள்ளனர்.
இதனால் ஆவேசம் அடைந்த எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், தொழிலாளர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரும் அனல் பறக்க சண்டை போட்டனர்.
இதில் சிஐடியூ அமைப்பாளர் பிச்சைமுத்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பும் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.