பாமக நிர்வாகிககளை கைது செய்ய சதி: ராமதாஸ்
சென்னை: வன்னிய சங்க தலைவர் குருவைக் கைது செய்து, அதன் பின்னர் பாமக முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக பொதுக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடந்தது. அன்று மாலையிலேயே திண்டிவனம் நகராட்சித் தலைவரை தங்கள் பக்கம் இழுத்த திமுக தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாமக சார்பில் வெற்றி பெற்று வந்துள்ள உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இது ஒரு புறம் இருக்கையில், பாமக நிர்வாகிகளில் ஒருவரான மாநில வன்னிய சங்கத்தலைவர் ஜெ. குரு மீது பொய்வழக்குகளை பதிவு செய்து வைத்துள்ள காவல்துறையினர், மேலும் ஒரு புதிய வழக்கில் அவரை சிக்க வைக்கவும், அதில் அவரைக் கைது செய்து காவலில் அடைக்கவும் அதி தீவரமான முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நிர்ப்பந்தம் காரணமாக காவல்துறையினர் குருவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்கிற நிலைமை உருவாகியிருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டால் பாமகவினரிடையே அது கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றும், அதை சாக்காக வைத்து பாமக முக்கிய நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கு பாமகவினர் எந்த வகையிலும் இடமளித்து விடக் கூடாது. தங்களின் எதிர்ப்பை அமைதி வழியில் காட்ட வேண்டும். அறவழியில் தெரிவிக்கலாம். அதே நேரத்தில்எங்கும் , எந்த இடத்திலும் சிறு அசம்பாவித சம்பவத்திற்கும் இடம் கொடுத்து விடக் கூடாது. இதில் பாமகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்ன நேர்ந்தாலும் அமைதி காக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
--












Click it and Unblock the Notifications