சாதாரண பெட்ரோல் விற்காத பங்குகள் முன்பு முற்றுகை: லாரி உரிமையாளர்கள்
சென்னை: சாதாரண பெட்ரோல், டீசல் விற்காத பெட்ரோல் நிலையங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சிலநாட்களாக சாதாரண வகை பெட்ரோல், டீசல் விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. அதிக விலை கொண்ட பிரீமியம் பெட்ரோல், டீசலே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட லாரி, டேங்கர், டிப்பர், டிரெய்லர், வேன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுகுமார், செயலாளர் யுவராஜ், பொருளாளர் பெரியசாமி ஆகியோர், பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், கடந்த 5ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக லாரி உரிமையாளர்கள் பொருளாதார நஷ்டத்தில் தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலையில உள்ளனர்.
டீசல், பெட்ரோல் விலை உயர்த்திய தேதியில் இருந்து அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சாதாரண டீசல், பெட்ரோல் விற்பனை செய்யாமல், விலை உயர்ந்த பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண பெட்ரோல், டீசல் கேட்டால், இருப்பு இல்லை என்கிறார்கள்.
உடனடியாக அனைத்து விற்பனை நிலையங்களிலும் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். இவற்றை 26ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.
இல்லாவிட்டால் 27ம் தேதி காலை தமிழ்நாட்டில் சாதாரண, பெட்ரோல், டீசல் விற்பனை செய்யாத பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு லாரி உரிமையாளற்கள் சங்கம்சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
--












Click it and Unblock the Notifications