சோனியாவுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு: 'இடைத்தேர்தல் வராது'
அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இன்று ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்து வருகின்றனர்.
மறுபுறம், இடதுசாரிகளுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சோனியா காந்தியை சந்தித்தார்.
சோனியாவிடம், முதல்வர் கருணாநிதி மற்றும் திமுகவின் நிலை குறித்து பாலு விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் நிலையை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறினேன்
பிரச்சினை என்று ஒன்று இருந்தால், தீர்வு என்றும் ஒன்று இருக்கும். மத்திய அரசு கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
திமுகவைப் பொறுத்தவரை அரசுக்கு ஆதரவாக உள்ளது. அதேசமயம், தோழர்களையும் (இடதுசாரிகள்) கைவிட நாங்கள் விரும்பவில்லை.
இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட முயற்சிப்போம். என்னைப் பொறுத்தவரை, முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரும் வாய்ப்பில்லை என்றார் பாலு.