கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள பூச்சி மருந்துடன் வந்த விவசாயியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திண்டிவனம், வெள்ளி மேடுபேட்டை அருகில் உள்ளது நாகவரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (40). விவசாயி.
ழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுநீதி நாளான திங்கள் கிழமையன்று இவர் ஒரு மனுவுடன் வந்தார். மேலும் கையில் பூச்சி மருந்து பாட்டிலையும் வைத்திருந்தார்.
இதைப் பார்த்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவனிடம் ஒப்படைத்தனர்.
விவசாயி நாராயணசாமியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் விசாரணை நடத்திய போது, தன்னுடைய நிலத்தில் கிணறு வெட்டுவதற்காக வெள்ளிமேடு பேட்டையில் உள்ள வங்கியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கடன் கேட்டு இது நாள் வரை கடன் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில் நாராயணசாமி ரூ.1.75 லட்சம் செலவில் 40 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டியுள்ளார்.
அந்தப் பணியை முடிக்க வங்கிக்கும், கலெக்டர் அலுவலகத்திற்கும் சென்று பல முறை மனு கொடுத்தும் பயன் இல்லாததால் விரக்தி அடைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்வது என்ற முடிவு எடுத்தாக கூறியுள்ளார்.