கடலில் மூழ்கி 2 பேர் பலி
வள்ளியூர்: மங்களூர் அருகே கடலில் மூழ்கி நெல்லை மாட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பலியானார்கள்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி-லெட்சுமி தம்பதியரின் மகன்கள் சீனிவாசன், சக்திவேல். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கர்நாடக மாநிலத்திற்கு சென்று வி்ட்டனர். அவர்கள் கர்நாடக மாநிலம் காவூர் என்ற ஊரில் கூலி வேலை செய்து வந்தனர்.
நேற்று சீனிவாசன் தனது தம்பி சக்திவேல் மற்றும் ஒரு உறவினருடன் மங்களூர் மாவட்டம் பனம்பூர் என்ற இடத்தில் உள்ள பீச்சிற்கு சென்றார். அங்கு சக்திவேல் திடீரென கடலில் இறங்கியபடி உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலை ஒன்று சக்திவேலை இழுத்து சென்றது. இதனால் அவர் கூச்சலிட்டார்.
இதைக் கண்டு கரையில் இருந்த அவரது அண்ணன் சீனிவாசன் அவரை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றார். ஆனால் துரதிர்ஷ்டமாக இருவருமே கடலில் மூழ்கி பலியாயினர். அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.