இந்தியாவில் புகைக்கு பலி 8 லட்சம் பேர்!
டெல்லி: சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் புகைப் பழக்கத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களில் உயிரை விடுவதாக அரசின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அட, விலையை எக்கச்சக்கமாக உயர்த்தினாலாவது 'புகைஞர்'களின் தீவிரம் குறையுமா என்று பார்த்தால், அது வேறு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
சிகரெட்தானே காஸ்ட்லி, நாங்க பீடிக்கு மாறிட்டோமே என்று கும்மியடிக்காத குறையாக பீடி, புகையிலை மற்றும் குட்கா வகைகளுக்குத் தாவி வருகிறார்களாம் 'புகைஞர்கள்'.
இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் மக்கள் புகைக்கும் பழக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களாம். இவர்களில் 53 சதவிகிதம் பேர் பீடிப் பிரியர்கள். 15 சதவிகிதம் மட்டுமே சிகரெட் பிடிப்பவர்கள். கைனி, குட்கா போன்றவற்றைப் பயன்படுத்துவோர் 32 சதவிகிதத்தினராம்.
சோஷியல் ஸ்மோக்கர்கள் எனப்படும் (எப்போதாவது புகைக்கும் பெண்களையும் சேர்த்து!) பிரிவினர் மட்டுமே 50 மில்லியன் இருப்பதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.
இந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு மேலும் 40 சதவிகிதம் வரை சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு விலையேற்ற முடிவு செய்துள்ளது.
பீடிப் பிரியர்கள் அதைவிட விலை குறைந்த புகைப் பொருளைக் கண்டுபிடிக்கும் வேலையில் இப்போதே இறங்கினாலும் ஆச்சர்யமில்லை.