பேன்சி கடையில் ரம், விஸ்கி, பீர், பிராந்தி!!
சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே பேன்சி கடைசியல், வெளிநாட்டு மது வகைகளை ரகசியமாக விற்று வந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பேன்சி கடையில் பெர்ப்யூம், வளையல், ரிப்பன், நகப் பூச்சு, மேக்கப் சாதனங்கள் உள்ளிட்டவைதான் விற்கப்படுவது வழக்கம். ஆனால் அதற்கு நேர் மாறாக ரம், விஸ்கி, பிராந்தி, பீர் உள்ளிட்ட வெளிநாட்டு மது வகைகளை விற்று போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒரு கடைக்காரர். அதுவும் அரசு மருத்துவமனைக்கு எதிரே இந்த அக்கப்போர் நடந்துள்ளது.
செபாஸ்டின் ராஜ் என்பவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரிகோ பேன்சி கடையை வைத்துள்ளார். இந்தக் கடைக்கு அருகே ஏராளமான லாட்ஜுகள் உள்ளன.
இவரது கடையில் மது வகைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கடையை சோதனையிட்டனர். அப்போது ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 150 வெளிநாட்டு மதுபாட்டில்கள் கடையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
24 பாட்டில் டைகர் பீர், 24 பாட்டில் ஹனி கேன் பீர், 24 பாட்டில் போஸ்டர்ஸ் பீர், 40 பாட்டில் பகார்டி பிரீசர், 4 பாட்டில் மேன்சன் ஹவுஸ், 10 பாட்டில் சீவாஸ் ரீகல், 5 பாட்டில் அலெக்ஸ் ஒயின், 1 பாட்டில் சாம்பெய்ன், 2 பாட்டில் ஸ்மிர்னாப் ஆகியவை செபாஸ்டின் கடையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
அருகில் உள்ள லாட்ஜுகளில் தங்கும் வெளிநாட்டவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடமிருந்து வெளிநாட்டு விஸ்கி, ரம், பிராந்தி, பீர் ஆகியவற்றை வாங்கிக் கொள்வாராம் செபாஸ்டின் ராஜ். பின்னர் அவற்றை தன்னைத் தேடி வரும் கஸ்டமர்களிடம் அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். பேன்சி பொருட்களை விற்பதை விட மது வகைகளை விற்பதன் மூலம் அதிக அளவில் பணம் கிடைத்ததால், அதை படு தீவிரமாக செய்ய ஆரம்பித்து போலீஸில் சிக்கிக் கொண்டார்.
செபாஸ்டினை போலீஸார் மது விலக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.