அந்தமானில் கடும் நிலநடுக்கம் - சென்னையும் அதிர்ந்தது
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று மாலை 5.10 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 6.7 ஆக இருந்தது. இதனால் அந்தமான், நிக்கோபார் தீவுகள் பெருமளவில் அதிர்ந்தன.
அங்கு பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து விரிவான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. போர்ட் பிளேர், ஹட் பே, மிடில் அந்தமான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது.
பூகம்பத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த பூகம்பம் சென்னையிலும் எதிரொலித்தது. என்றாலும் நகரம் முழுவதும் இந்த நில நடுக்கம் உணரப்படவில்லை.
நகரின் மையப் பகுதிகளான ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், கோயம்பேடு, வடபழனியின் சில இடங்களில் மட்டுமே இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்தப் பகுதியிலிருந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு உடனடியாக வெளியேறி சாலைகளில் நின்று கொண்டனர்.
சுமார் 3.5 ரிக்டர் அளவுக்கு இந்த நிலநடுக்கம் இருந்ததாக பின்னர் சென்னை வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.