கரூர் அதிமுக முன்னாள் நகர செயலாளரின் மண்டை உடைப்பு
கரூர்: பாதுகாப்பு கேட்டு வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்த கரூர் அதிமுக முன்னாள் நகர செயலாளருக்கு அடி உதை விழுந்தது. மண்டை உடைக்கப்பட்டது.
கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் வசிப்பவர் சாரங்கபாணி (50). இவர் அதிமுக முன்னாள் நகர செயலாளராக இருந்தவர். கட்சியில் பல பொறுப்புகளில் பணியாற்றியவர்.
இவரது வீட்டு அருகில் வசிக்கும் ராஜூ என்பவருக்கும், கட்டிட ஒப்பந்ததாரர் நல்லுசாமி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இதில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது நல்லுசாமி, ராஜூவை தாக்கும் போது அவர் பாதுகாப்பு கோரி அருகில் இருந்த சாரங்கபாணி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவருக்கு அடைக்கலம் கொடுத்த சாரங்கபாணியை ஒப்பந்ததாரர் நல்லுசாமி, மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் சிலர் கண்களில் மிளகாய் பொடி தூவி, உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. மேலும் கை, தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சாரங்கபாணி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து நல்லுசாமி உள்பட 4 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications