பல்லடத்தில் ரூ.1500 கோடியில் கியர் பாக்ஸ் தொழிற்சாலை
சென்னை: கோவை மாவட்டம் பல்லடத்தில் காற்றாலை கியர் பாக்ஸ் தயாரிக்கும் ரூ. 1500 கோடி முதலீட்டில் உருவாகும் புதிய தொழிற்சாலைக்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஹேன்சன் டிரான்ஸ்மிஷன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மோட்டார் வாகன பயன்பாட்டுக்கு அல்லாத கியர் பாக்ஸ்களைத் தயாரிப்பதில் உலக அளவில் புகழ் பெற்றுள்ள இரண்டாவது பெரிய நிறுவனம். அதன் துணை நிறுவனமாக இந்தியாவில் செயல்படுவது ஹேன்சன் டிரைவ்ஸ் நிறுவனமாகும்.
காற்றாலை பயன்பாடுகளுக்கான மின்கடத்தி கியர் பாக்ஸ்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்களுள் இந் நிறுவனம் முதன்மையானது.
இந்நிறுவனம் கோவை மாவட்டம் பல்லடம் அருகே, கருமத்தம்பட்டி மற்றும் கிட்டாம்பாளையம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள சுஸ்லான் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் காற்றாலை கியர் பாக்ஸ்கள் தயாரிக்கும் தொழிற்சாலையினை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இத்தொழிற்சாலையின் மூலம் ஹேன்சன் டிரைவ்ஸ் நிறுவனம் ஐந்தாண்டு கால அளவில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைச் செய்யும்; ஏறத்தாழ 800 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 200 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளையும் அளிக்கும்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் புதிய தொழிற்சாலை நிறுவப்படுவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பாக, தொழில்துறைச் செயலாளர் எம்.எப்.ஃபரூக்கியும், ஹேன்சன் டிரைவ்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஹேன்சன் டிரான்ஸ்மிஷன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் மற்றும் ஹேன்சன் டிரைவ்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் இவன்ப்ரம்சும் கையெழுத்திட்டனர்.
மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, நிதித்துறைச் செயலாளர் கு.ஞானதேசிகன் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications