கருணாநிதியால் 4 தலைமுறையினர் நாசம்: ராமதாஸ்

சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. இதனை முன்வைத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மதுஒழிப்பு மாநாடு நடத்தவுள்ளோம்.
ஜூலை 8ந் தேதி ராமநாதபுரத்திலும், 9ந் தேதி கன்னியாகுமரியிலும் இதனைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பாமகவின் மகளிர் சங்கம் ஜூலை 12ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைக்கு எதிராக அரசாங்கமே மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி மதுக்கடைகளை திறந்து 4 தலைமுறையினரை குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்கி நாசப்படுத்தி விட்டார். இந்த தலைமுறையாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
இதற்கு தொண்டு நிறுவனங்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், கல்வியாளர்கள், காந்தியவாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு வேறு எங்கும் சாட்சியை தேட வேண்டாம். என்னுடைய குடும்பத்திலேயே ஒரு சாட்சி இருக்கிறது என்று கருணாநிதி சட்டமன்றத்திலேயே பேசினார்.
அவரது மூத்த மகன் மு.க.முத்துவைக் குறிப்பிட்டுத்தான் அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். என் உடன் பிறந்த இரண்டு சகோதரர்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இறந்துவிட்டார்கள். இன்றைக்கு பெண்களும் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் நிலை உள்ளது. டீக்கடைகளை விட டாஸ்மாக் மதுக்கடை களும், திறந்தவெளி பார்களும் அதிகமாக உருவாகியிருக்கின்றன. எனவேதான் இதனை முழுமையாக ஒழிக்க நாங்கள் பாடுபடுகிறோம்.
துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக என் மீது பழி போடுகிறார்கள்.
ஆனால் அதிமுக ஆட்சியில் இதே போன்று பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பை பெருக்கவும் சிறுசேரி அருகே 70 ஐடி கம்பெனி களுக்கு 125 ஏக்கர் இடம் வழங்குவதற்கான நில ஒப்படைப்பு ஆணையை திமுக ஆட்சி ரத்து செய்து விட்டது.
அங்கு ஒரு ஏக்கர் மூன்று கோடி விலை விற்பதாகவும், ஆனால் அதிமுக அரசு ரூ.48 லட்சம் என்ற குறைந்த விலையை நிர்ணயித் ததாகவும் காரணம் கூறி ஆணையை ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால் இதே திமுக அரசு சென்னை தரமணியில் டாடா நிறுவனத்துக்கும், டிஎச்எல் நிறுவனத்துக்கும் சுமார் 35 ஏக்கர் நிலத்தை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த இடத்தை என்ன விலையில் கொடுத்தார்கள் என்று திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதே போல சிப்காட்டுக்கு சொந்தமான நிலம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்க அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதை எதிர்த்து ஆற்காடு வீராசாமி வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரணையும் வேண்டும் என்றார்கள்.
இப்போது எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று என் மீது குற்றம் சாட்டும் திமுக, முந்தைய அதிமுக ஆட்சியில் இத்தகைய நடவடிக்கைகளில் ஏன் ஈடுபட்டது?
50 ஆயிரம் ரூபாய், 1 லட்சம் ரூபாய் என்று விலை பேசி பாமகவினரை பிடிக்கிறார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட ஒரு சிலரை அழைத்து வந்து முதல்வரின் பக்கத்தில் நிற்க வைத்து படம் எடுத்து வெளியிடுகிறார்கள். இப்படிப்பட்ட மிகவும் கீழ்த்தரமான, கேவலமான அரசியல் திமுகவுக்கு கைவந்த கலைதான். இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.
அண்மையில் கூட, அதிமுகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரை திமுகவில் சேர்த்து அவருக்கு ஒரு பதவியும் கொடுத்திருக்கிறார்கள். பாமகவினரை இழுக்கும் வேலையில் திமுக மந்திரிகளே ஈடுபட்டுள்ளார்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications