மத்திய அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு வாபஸாகும்?

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் இன்று இரண்டு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. முதல் நிகழ்வாக, பிரதமர் மன்மோகன் சிங்கை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார்.
அப்போது அணு சக்தி ஒப்பந்தத்தை தொடருவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் எப்போது பேசலாம் என்பது குறித்து இருவரும் விவாதித்ததாகவும் தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டம் டெல்லி வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎம் பொலிட்பீரோ கூட்டம்
இரண்டாவது நிகழ்வாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் நடந்தது. இதில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொலிட்பீரோ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொலிட்பீரோ உறுப்பினர் உறுப்பினர் பீமன் போஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பிரகாஷ் காரத்துக்கும், சீதாராம் எச்சூரிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முடிவை எடுக்க பொலிட்பீரோவுக்கு ஏற்கனவே கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. தற்போது காரத்தும், எச்சூரியும் இதுகுறித்து முடிவெடுப்பார்கள்.
தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இன்றைய இரு நிகழ்வுகள் மூலம் மத்திய அரசும், இடதுசாரிகளும் இடைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டதையே உணர்த்துகின்றன.
ஒப்பந்தம் அமலானால் ஆதரவு வாபஸ் - காரத்
முன்னதாக செய்தியாளர்களிடம் காரத் பேசுகையில், எங்களது நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சர்வதேச அணு சக்தி ஏஜென்சியை அணுகக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
எந்தவித சமரசத்தையும் ஏற்க மாட்டோம். அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொடர்பான கூட்டணியை அவர்கள் (மத்திய அரசு) விரும்பினால், தாராளமாக போய்க் கொள்ளட்டும். அப்படி நடந்தால் நாற்பது ஆண்டுகளுக்கு நாம் அவர்களிடம் அடிமையாக இருக்க வேண்டும். நமது சுதந்திர வெளியுறவுக் கொள்கை முற்றிலும் பாதிக்கப்படும். இதை ஏற்க முடியாது.
விலை வாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு தீவிர ஆர்வம் காட்டுகிறது என்று புரியவில்லை.
மத்தியில் தன்னால் தனித்து ஆள முடியாது என்பதை முதலில் காங்கிரஸ் உணர வேண்டும். அந்தக் காலம் போய் விட்டது.
அணு சக்தி ஒப்பந்தம் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில்இடம் பெறாத ஒன்று. எனவே அதை அமல்படுத்த மத்திய அரசு முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.
எங்களைப் பொறுத்தவரை அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம். எங்களுக்கு வேறு வழியில்லை என்றார் காரத்.
இடைத் தேர்தல் வருமா?
நேற்றுதான் காங்கிரஸ் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று அணு சக்தி ஒப்பந்தத்ைத தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
மேலும், அணு சக்தி ஒப்பந்தத்ைத தொடரமத்திய அரசு முடிவு செய்தால் ஆதரவை திரும்பப் பெறுவோம் என காரத்தும் தெரிவித்துள்ளார். இதனால் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல்வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பிரகாசமாகியுள்ளது.
--












Click it and Unblock the Notifications