புளியங்குடி அருகே ஓட ஓட விரட்டி விவசாயி கொலை
புளியங்குடி: நெல்லைமாவட்டம் புளியங்குடி அருகே ஓட ஓட விரட்டி விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.
சிவகரி அருகேயுள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் காந்தி. விவசாயி. இவரது மகன் மூர்த்தி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் சிங்கதுரை, அவரது மனைவி இசக்கி துரைச்சி, மகன் ராம்குமார், ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 28-4-07 அன்று ராயகிரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மூர்த்தியை, சிங்கதுரை உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி சிங்கதுரை, அவரது மனைவி இசக்கிதுரைச்சி, மகன் ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். தற்போது சிங்கதுரையும், இசக்கிதுரைச்சியும் ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு சிவகிரி கோர்ட்டில் அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. சாட்சியாக காந்தி சேர்க்கப்பட்டிருந்தார். விசாரணையின் போது காந்தி தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லி விடுவார் என பயந்த சிங்கதுரை தரப்பினர் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை காந்தி ஊருக்கு ஒதுக்குபுறம் உள்ள தனது கரும்பு தோட்டத்திற்கு சென்றுவிட்டு ராயகிரி-வள்ளியூர் ரோட்டில் உள்ள சிவகிரி சந்திரத்திற்கு சொந்தமான வயல் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை சிங்கதுரை, அவரது மனைவி இசக்கிதுரைச்சி, மற்றொரு மகன் சங்கர் ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதைக்கண்ட காந்தி அங்கிருந்து வயல் வழியாக ஓட்டம் பிடித்தார்.
இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று ஓடஓட விரட்டி சராமரியாக வெட்டியது. முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காந்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு சிங்கதுரை உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.