இலங்கைக்கு இந்தியா பேருதவி: தளபதி பொன்சேகா
கொழும்பு: இலங்கைக்கு இந்தியா பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. சிங்கள தேசத்தை அழிக்க விடுதலைப் புலிகள் நினைக்கின்றனர். ஆனால் ஒரே வருடத்தில் நாங்கள் விடுதலைப் புலிகளை ஒழித்து விடுவோம் என இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கொழும்பில், வெளிநாட்டு பத்திரிக்கையாளர் சங்கத்தினருக்கு பொன்சேகா விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தங்களுக்கு இந்தியா பெரிய அளவில் உதவிகள் செய்து வருவதாகவும், அதனால் இலங்கை படைகள் முன்பை விட உத்வேகத்துடன் விடுதலைப் புலிகளுடன் மோதி வருவதாகவும், ஒரு வருடத்தில் புலிகளை ஒழித்து விடுவோம் என கூறியுள்ளார்.
இலங்கைக்கு இந்தியா ஆயுதவு உதவிகள் செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் கோரி வரும் நிலையில், பொன்சேகாவின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்சேகாவின் பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள் ...
இந்தியா எங்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது. தார்மீக வழியிலும், அரசியல் ரீதியிலும் இந்தியா எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. எங்களது படைகளைச் சேர்ந்த 800 அதிகாரிகள், இந்தியாவில் ஆண்டுதோறும் பயிற்சி பெற்று வருகின்றனர். அனைத்துப் பயிற்சிகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு பயிற்சியின்போது அலவன்ஸையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்தியா எங்களுக்கு இதுபோல வழங்கி வரும் ஆதரவு மிகப் பெரியது, மகத்தானது.
இந்தியாவிடம் நாங்கள் ஆயுதம் எதையும் வாங்கவில்லை. அதற்காக சமீபத்தில் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் வரவும் இல்லை. அதுதொடர்பான சந்திப்பும் அல்ல அது. எங்களுக்கு இப்போதைக்கு ஆயுதம் தேவையில்லை என்பது இந்தியாவுக்கும் தெரியும்.
தாக்குதல் ஆயுதங்களை தருவதில்லை என்பதை கொள்கையாக வைத்துள்ளது இந்தியா. தென்னிந்தியாவில் உள்ள அரசியல் சூழ்நிலையையும் இந்திய அரசு மனதில் கொள்ள வேண்டியுள்ளது. எங்களுக்கும் அது புரிகிறது. எனவே இந்தியாவை சிக்கலில் ஆழ்த்த நாங்கள் விரும்பவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் முழு அளவிலான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால்தான் அவர்களை பெருமளவில் ஒடுக்கி விட்டோம். முன்பு அப்படி நாங்கள் செயல்படவில்லை. இதனால்தான் அவர்கள் வளர்ந்து விட்டனர்.
அதேசமயம், விடுதலைப் புலிகள் எங்களைப் போல இப்போது சண்டையிடுவதில்லை. எங்களது பலவீனத்தை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் எங்களது பல பலவீனங்களை நாங்கள் சரி செய்து விட்டோம். இதனால் அவர்களுக்கு தோல்விகள் தொடர் கதையாகியுள்ளன.
கட்டுக்கோப்பான ராணுவமாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது அந்தப் பெயரை இழந்து விட்டனர். அவர்களிடம் முன்பிருந்த பலம் இப்போது இல்லை. இன்னும் ஒரு ஆண்டுக்குள் விடுதலைப் புலிகளை நாங்கள் முழுமையாக ஒடுக்குவோம்.
எதிர்காலத்தில் ஒரு தீவிரவாதக் குழுவாகத்தான் அவர்களால் செயல்பட முடியுமே தவிர தற்போது உள்ளதைப் போல இயக்கமாக செயல்பட முடியாது.
காட்டுக்குள் புகுந்து சண்டை போடுவதில் நாங்கள் தற்போது தேர்ந்து விட்டோம். முன்பு போல காட்டுக்குள் நுழைய எங்களது வீரர்கள் அஞ்சுவதில்லை. தினசரி 2 பேருக்கு கண்ணிவெடிகளை அகற்றும்போது கால்கள் சேதமடைகின்றன. இருந்தாலும் அதற்காக படையினர் கவலைப்படவில்லை. தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
உலகிலேயே வனப் பகுதியில் சண்டை போடக் கூடிய திறமையான ஒரே ராணுவம் தற்போது இலங்கை ராணுவம்தான்.
சிங்கள தேசத்தை அழிப்பது மட்டுமே விடுதலைப் புலிகளின் ஒரே நோக்கம். அதற்காக நாடு முழுவதையும் கைப்பற்ற அவர்கள் துடிக்கிறார்கள் என்றார் பொன்சேகா.












Click it and Unblock the Notifications