தமிழக மீனவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள தா.பாண்டியன் யோசனை
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தமிழக மீனவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தா.பாண்டியன் தலைமையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீனவர் வாழ்வுரிமை பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பயணம் ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது.
நேற்று இந்தப் பிரசார குழுவினர் ராமநாதபுரம் வந்து சேர்ந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசுகையில், தமிழக மீனவர்கள் மட்டும்தான் உலகிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகில் வேறு எங்குமே இப்படிப்பட்ட கொடுமை இல்லை.
இதை இந்திய கடற்படையும், கடலோரக்காவல் படையும் இதுவரை தடுக்கவில்லை. துப்பாக்கியால் சுடக்கூடாது எனஇலங்கை அரசை மத்திய அரசு இதுவரை எச்சரிக்கவில்லை. மீனவர்கள் திசை மாறி கடல் எல்லை கடந்து அயல் நாட்டு எல்லைக்குள் போய் விட்டால் அவர்களை கைது செய்து திரும்ப ஒப்படைக்க வேண்டுமே தவிர சுட்டுக் கொல்லக் கூடாது.
கச்சத்தீவை குத்தகைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுதொடர்பான ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்தினாலே போதுமானது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த முன்வராமல் இருப்பதுதான் பிரச்சினையே.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்குப் பின்பும் இந்தியாவின் இறையாண்மைக்கும், கவுரவத்திற்கும் இலங்கை அரசு தொடர்ந்து சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை இலங்கை சுட்டு வீழ்த்திக் கொண்டிருப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும்.
தமிழகத்தில் யார் யாருடைய கைகளில் எல்லாமோ துப்பாக்கிகள் புழங்குகின்றன. எனவே தமிழக மீனவர்களும் தங்களது தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை அனுப்பலாம்.
விரைவில் இதுதொடர்பாக தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி பிரதமரிடம் நேரில் முறையிடவுள்ளோம் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications