இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் சித்திரவதையில் சிக்கி ராமேஸ்வரம் ம்ீனவர் படுகாயமடைந்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் மீண்டும் ஒரு கண்ணீர் கதை. இயற்கை மரணம் என்பதை விட இலங்கை கடற்படையின் வெறிக் கரங்களில் சிக்கி இறக்கும் நிலையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நேற்று மேலும் ஒரு அடி விழுந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து 722 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
சரமாரியாக மீனவர்களை நோக்கி சுட்டனர். இதில் ஒரு குண்டு படகின் மீது பட்டு, மாரீஸ் என்பவரின் முதுகில் பாய்ந்தது. இதில் அவர்காயமடைந்தார்.
அத்தோடு நிற்காத கடற்படையினர், மாரீஸ் இருந்த படகில் இறங்கி அங்கு மீன்களை அள்ள பயன்படுத்தப்படும் கட்டைகளால் மாரீஸ் உள்ளிட்ட மீனவர்களை சரமாரியாக தாக்கினர். ஒரு வெறி பிடித்த வீரர், தனது பூட்ஸ் காலால் மாரீஸை தாறுமாறாக மிதித்தார். இதில் மாரீஸ் படுகாயமடைந்தார்.
பின்னர் அந்தப் படகில் இருந்த நான்கு மீனவர்களையும் கடலில் குதிக்குமாறு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். இதையடுத்து நான்கு பேரும் கடலில்குதித்தனர். நடுக்கடலில் பரிதவிப்புடன் அவர்கள் நீச்சலடித்தபடி போராடினர்.
அதன் பின்னர் நான்கு பேரையும் படகில் ஏற்றிய கடற்படையினர் இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அதன் பின்னர் மாரீஸுடன் மீனவர்கள் கரைக்கு விரைந்தனர். ராமேஸ்வரம் மருத்துவமனையில் தற்போது மாரீஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications