பேரணியாக சென்ற தேமுதிகவினர் மீது தடியடி
திருவள்ளூர்: விலைவாசி உயர்வை கண்டித்து திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தேமுதிகவினர் ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில வர்த்தக அணி செயலாளர் வி.வி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களை எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளது என்றும் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை எனவும் கூறினர். ஆனால் அதை மீறி தேமுதிகவினர் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
உடனே போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் 20 பெண்கள் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications