பெங்களூரில் சாதா பெட்ரோல், டீசல் சப்ளை நிறுத்தம்!
10-15 நாட்ளுக்கு முன்பு இப்படித்தான் சென்னையில் ஆரம்பித்தார்கள். சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையை மெதுவாக குறைத்துக் கொண்டு வந்த எண்ணை விற்பனைநிறுவனங்கள், ஒரு கட்டத்தில் விலை அதிகமான பவர் மற்றும் பிரீமியம் வகை பெட்ரோல், டீசலை மட்டுமே சப்ளை செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சாதாரண பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் இல்லாமல் பெரும் பிரச்சினை எழுந்து நேற்றுதான் ஓய்ந்துள்ளது.
இந்த நிலையில் பெட்ரோலிய நிறுவனங்களின் அடுத்த டார்கெட் பெங்களூராக இருக்கும் எனத் தெரிகிறது.
பெங்களூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் படிப்படியாக சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையை குறைக்கத் தொடங்கியுள்ளனராம். பவர், பிரீமியம் வகை பெட்ரோல், டீசல்தான் ஸ்டாக் இருப்பதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கேட்கும் வாடிக்கையாளர்களிடம் இதுதான் எங்களுக்கு சப்ளை ஆகிறது என்று கூறுகிறார்கள் உரிமையாளர்கள்.