பிஇ-எம்பிபிஎஸ் கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் 9 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு இன்று சீட் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கான கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு 12,274 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 11,687 பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றிருந்தனர். முதற்கட்ட கவுன்சிலிங் இன்று தொடங்கியது. இது 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
2008-09ம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல்
ஒன்பது இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு மட்டும் இன்று கவுன்சிலிங் நடந்தது.
சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் முன்னிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் கவுன்சிலிங் நடந்தது.
இதில் 9 பேருக்கும் சீட் வழங்குவதற்கான உத்தரவை அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கினார்.
சென்னை மாணவி சோனு ராஜன், எஸ்.வி.மனோஜ்குமார், அருண், தினேஷ், வெங்கடேஷ், கமலக்குமார், விக்னேஷ், இ.மனோஜ்குமார், பிரியம்வதா ஆகியோர் இன்றைய கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு சீட்களை பெற்றனர்.
இவர்களில் சோனு ராஜன் ஏற்கனவே பிடிஎஸ் படித்து வருகிறார். ஆனால் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பதற்காக அவர் விண்ணப்பித்திருந்தார். தற்போது அவர் விரும்பியபடியே எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை 9 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணி முதல் துப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
நாளை நடக்கும் முதல்நாள் கவுன்சிலிங்கிற்கு 198.50 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
என்ஜீனியரிங் கவுன்சிலிங்கும் தொடங்கியது:
பி.இ. கவுன்சிலிங்கும் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களுக்கான கவுன்சிலிங் நடந்தது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி, ஜூலை 1, 2ம் தேதிகளில் நடந்தது. இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று தொடங்கியது.
நாளை (4ம் தேதி) முதல் 8ம் தேதி வரை பிளஸ் 2வில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கவுள்ளது.பொறியியல் கல்லூரிகள் மீது புகார் தெரிவிக்க மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications