ரயில் டிக்கெட் விற்பனையில் தனியார்!
சென்னை: ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற நீண்ட கியூ வரிசையில் நிற்க வேண்டிய அவலத்திற்கு விடிவு பிறந்துள்ளது. தனியாரும் இனிமேல் இந்த டிக்கெட் விற்பனையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ரயில் நிலையங்களுக்கு வெளியே இவர்கள் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை விற்பார்கள்.
முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய விரும்புவோர் அதற்கான டிக்கெட்டை, சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்றுதான் பெற வேண்டும். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டும்.
இந்த நிலையில் பயணிகளின் அவதியைப் போக்கும் வகையில், முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை விற்க தனியார்களையும் ஈடுபடுத்தப் போகிறது ரயில்வே.
இதற்காக 82 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு 'ஜன் சதாரன் டிக்கெட் புக்கிங் சேவக்' என்று பெயர். இவர்கள் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். தகுதியுள்ளவர்கள் இந்தப் பணியைப் பெற விண்ணப்பிக்கலாம்.
சுற்றுலா முகவர்கள், ரயில் பயண சேவை முகவர்கள், சிட்டி புக்கிங் ஏஜெண்டுகள், ரயில்வே ஏஜெண்டுகள் ஆகியோர் இதில் சேர தகுதியுடையவர்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் புக்கிங் ஆபீஸ் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே புக்கிங் கவுண்டரைப் போட்டுக் கொள்ளலாம்.
ரயில்வே துறையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்போது ரூ.15 ஆயிரத்துடன், காப்புத் தொகை ரூ.40 ஆயிரத்திற்கு வங்கி உத்தரவாதமும் அளிக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரில் கம்ப்யூட்டர் வசதி இருக்க வேண்டும். இந்த கம்ப்யூட்டருக்கு ரயில்வே துறை கம்ப்யூட்டருடன் இணைப்பு கொடுக்கப்படும். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். ஆக மொத்தம் ரூ.1 லட்சம் வரை செலவாகும்.
எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி யூ.டி.எஸ். என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 114 ரெயில் நிலையங்களிலும் இந்த வசதி உள்ளது. இங்கு, நாட்டின் எந்த ஊருக்கு செல்வதற்கும் முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட் கிடைக்கும். இந்த யு.டி.எஸ். வசதி, முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனையாளருக்கும் வழங்கப்படும். அதனைக் கொண்டு முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை விற்கலாம். ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் பயணிகளிடம் கமிஷன் பெறறுக் கொள்ளலாம்.
சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 30 ரயில் நிலையங்களில் மொத்தம் 82 விற்பனையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
எந்தெந்த ரயில் நிலையம் என்ற விவரமும், அதற்கு எத்தனை விற்பனையாளர்கள் என்ற விவரமும் வருமாறு:
சென்னை சென்டிரல் (12)
சென்னை எழும்பூர் (9)
தாம்பரம் (5)
காட்பாடி (4)
சென்னை கடற்கரை (3)
மூர்மார்க்கெட் (3)
மாம்பலம் (3)
பரங்கிமலை (3)
அரக்கோணம் (3)
செங்கல்பட்டு (2)
ஜோலார்பேட்டை (2)
திருத்தணி (2)
பூங்காநகர் (2)
நுங்கம்பாக்கம் (2)
கோடம்பாக்கம் (2)
சைதாப்பேட்டை (2)
கிண்டி (2)
பழவந்தாங்கல் (2)
பல்லாவரம் (2)
குரோம்பேட்டை (2)
பெரம்பூர் (2)
வில்லிவாக்கம் (2)
அம்பத்தூர் (2)
ஆவடி (2)
திருவள்ளூர் (2)
தாம்பரம் சானடோரியம் (1)
ஆம்பூர் (1)
மேல்மருவத்தூர் (1)
பட்டாபிராம் (1)
திருநின்றவூர் (1).