கொலை முயற்சி: இந்திய மாணவருக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்: கொலை முயற்சி வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த மாணவருக்கு சிங்கப்பூர் கோர்ட், 16 ஆண்டு சிறைத் தண்டனையும், 16 கசையடி தண்டனையும் விதித்துள்ளது.
சிங்கப்பூர் பாலிடெக்னிக் கழகத்தில், படித்து வருபவர் பட்லா ஜதீன் நவீன் (23).அங்கு மெரைன் என்ஜீனியரிங் படிப்பை படித்து வருகிறார் நவீன்.
இவரும், மும்தா சஹானி (38) என்கிற வெப்டிசைனருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மும்தா திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவருக்கு 8 வயது மகனும் உள்ளார். இந்தக் காதலுக்கு மும்தாவின் 72 வயது தந்தை சஹானி மானிக் ராம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மும்தாவைப் பார்க்க வரக் கூடாது என நவீனையும் எச்சரித்தார். இதனால் மும்தா, நவீனைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.
இதனால் கோபமடைந்த நவீன் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் சஹானியின் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த சஹானி, அவரது இரு வேலையாட்களை கத்தியால் குத்தினார். இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.
ஆபத்தான நிலையில் மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சஹானி அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து நவீன் மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சி, தவறான செய்கை, படுகாயத்தை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானதாக சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து நீதிபதி கான் திங் சியூ அளித்த தீர்ப்பில், சஹானியை கொலை செய்ய முயன்றதற்கு 10 ஆண்டு சிறை மற்றும் 6 கசையடிகளும், இரு வேலையாட்களை தாக்கியதற்கு 6 ஆண்டு சிறை மற்றும் 10 கசையடிளும் தண்டனையாக வழங்கப்படுவதாக அறிவித்தார்.
தனது தாயார் வீட்டை விற்று தன்னை படிக்க அனுப்பியிருப்பதாகவும், தன்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் நவீன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.