50 ரூபாய் தர மறுத்த சிறுவனை ரயிலிலிருந்து தள்ளிய டிடிஆர்
டெல்லி: ரயில் பெட்டியில் கிடந்த 50 ரூபாய் தாள் யாருக்கு சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில், 13 வயதுசிறுவனை, ஓடும் ரயிலிலிருந்து பிடித்துக் கீழே தள்ளினார் கொடுமைக்கார டிக்கெட் பரிசோதகர். இதில் அந்த சிறுவனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு விட்டது.
கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. ரூர்கேலா வந்த அந்த ரயிலில் சங்கர் சிங் என்கிற 13 வயது சிறுவன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான். அப்போது ரயில் பெட்டியில் 50 ரூபாய் தாள் கிடப்பதைப் பார்த்தான்.
அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பணத்தை தன்னிடம் தருமாறு கூறியுள்ளார். ஆனால் அதைத் தர மறுத்துள்ளான் சங்கர்சிங். இதனால் கோபமடைந்த டிக்கெட் பரிசோதகர் ஈவு இரக்கமே இல்லாமல், ஓடும் ரயிலிலிருந்து சிறுவனைப் பிடித்து தள்ளி விட்டார்.
இதில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக ரூர்கேலாவில் உள்ள மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றனர். அங்கு அவனது ஒரு காலை வெட்டி எடுத்துள்ளனர் டாக்டர்கள். தொடர்ந்து அவன் சிகிச்சை
பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் சிங்குடன் இருந்த அவனது நண்பர் ராஜேஷ் சிங் கூறுகையில், அந்த டிக்கெட் பரிசோதகர் பெரிய மீசையுடன் இருந்தார். சங்கரை அவர் சரமாரியாகஅடித்து கீழே தள்ளி விட்டார். அவரை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்றான்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பரிசோதகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை உடனடியாக கைது செய்யாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக உள்ளூர் மக்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications