ஆக. 8 முதல் என்ஜினீயரிங் வகுப்புகள் தொடக்கம்
சென்னை: முதலாண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்கள் சேருவதற்கான சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கியது. மொத்தமுள்ள 100 இடங்களுக்கு 400 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் அட்மிஷன் உத்தரவை வழங்கி கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார். பின்னர் துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதி வசதி விரிவாக்கம்:
என்ஜினீயரிங் படிப்பில் விளையாட்டு பிரிவினருக்கு மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கு 2,517 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதி அடிப்படையில் 400 பேருக்கு கவுன்சிலிங்கிற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. கவுன்சிலிங் மூலம் 100 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் விடுதி வசதி போதுமானதாக இல்லை. மாணவ-மாணவிகளின் வசதிக்காக விடுதி வசதியை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி, கிண்டி வளாகத்தில் கூடுதலாக 200 பேரும், எம்.ஐ.டி. வளாகத்தில் கூடுதலாக 100 பேரும் விடுதியில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
முதல் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக விடுதி வசதிக்கான பணிகள் முடிக்கப்படும்.












Click it and Unblock the Notifications