மருத்துவ கவுன்சிலிங்: கோர்ட்டில் வாதாடி வென்ற மாணவி
மதுரை: வயதை காரணம் காட்டி மறுக்கப்பட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்கும் உரிமையை நீதிமன்ற உதவியுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி வாதாடி, போராடி பெற்றுள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மருங்கராஜ். இவரது மகள் திவ்யபாரதி (17). இவர் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் டூ தேர்வில் 1055 மதிப்பெண் பெற்றிருந்தார். கட்ஆப் மதிப்பெண் 195.5 பெற்றிருந்தார். இதனால் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் மாணவி திவ்யபாரதிக்கு வயது 16 என்று காரணம் காட்டி மருத்துவ கவுன்சிலிங்கில் சேர அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் தனக்கு நீதி வேண்டி திவ்யபாரதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
நேற்று இந்த மனு விசாரனைக்கு வந்தது. ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் பங்கு எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்ட மாணவி திவ்யபாரதி நீதிமன்றத்தில் தானே ஆஜராகி நீதிபதி சுகுணா முன்பு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.
அப்போது, தனது பிறந்த தேதி 5.3.91 என்றும், ஆனால் பள்ளிச் சான்றிதழில் அது தவறுதலாக மாற்றப்பட்டு விட்டது என்றும், மேலும் அந்த தவற்றை சுட்டிக்காட்டி பள்ளி நிர்வாகத்திடம் மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை என்றும் வாதாடினார். தனது அசல் பிறப்பு சான்றிதழையும் சமர்ப்பித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவி திவ்யபாரதியை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications