20 பாமக தலைவர்களும் கைது: பெரம்பலூர், அரியலூரில் போலீஸ் குவிப்பு
பெரம்பலூர்: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்ளில் கடும் பதட்டம் நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டச் செயலாளர் வைத்தி, மாவட்டத் தலைவர் மணிமாறன் உள்பட 20 முக்கியப் பிரமுகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வன்னியர்கள் அதிகம் வசிக்கும் விழுப்புரம், கடலூர், அரியலூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் அரியலூரிலும், பெரம்பலூரிலும் குவிக்கப்பட்டுள்ளனர்
மீன்சுருட்டி, சேத்தியா தோப்பு, பண்ருட்டி, அணைக்கரை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டன. பெரும்பாலான தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
காட்டுமன்னார் கோயில் போன்ற முக்கிய நகரங்களிலும் கடைகளை அடைக்கச் சொல்லி பாமகவினர் வற்புறுத்துவதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நிலைமை பதட்டமாக இருந்தாலும் எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பேருந்துகள் வழக்கம்போல் ஒடுகின்றன.












Click it and Unblock the Notifications