அதிகாலையில் வீட்டை உடைத்து காடுவெட்டி குரு கைது-15 நாள் காவல்!!

இன்று காலை 4.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் சென்ற 200 போலீசார் கொண்ட படையினர் அவரை கைது செய்தனர்.
குருவின் வீட்டுக் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், அதைத் திறக்கும்வரை காத்திருக்காமல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இதையடுதுத்து இரவோடு இரவாக பெரம்பலூர் மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட குருவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இச் சம்பவத்தால் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் வன்னிய சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களிலும் பதற்றம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் எம்எல்ஏவான குரு, கடந்த சில மாதங்களாக திமுக தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி வந்தார். முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்களை பகிரங்கமாகத் தாக்கினார்.
மத்திய அமைச்சர் ராஜாவை ஒருமையில் திட்டி வந்தார். குறிப்பாக பெரம்பலூரில் நடந்த பாமக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர், ராஜாவை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் குரு. மேலும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை ஆணையரையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
குருவின் இந்தப் பேச்சை காரணமாக வைத்துத் தான் பாமகவை கூட்டணியிலிருந்து விரட்டியடித்தது திமுக.
கூட்டணி முறிந்தபோதே காடுவெட்டி குரு கைது செய்யப்படக்கூடும் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என காவல்துறை டிஜிபியே கடந்த ஜூன் 23ம் தேதி தான அறிவித்திருந்தார்.
ஆனால், காடுவெட்டி குரு மீது போலீசார் பொய் வழக்குகள் போட்டிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதை டிஜிபி மறுத்தார்.
கதவுகளை உடைத்து...
இந் நிலையில் தான் அதிகாலையில் குருவை போலீசார் காடுவெட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் 200 போலீசார் கொண்ட படை குருவின் வீட்டைச் சுற்றி வளைத்து கதவைத் தட்டினர். ஆனால் கதவு திறக்க சற்றுத் தாமதமானதால், கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அதிமுக பிரமுகர் குணசேகரன் என்பவரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட பழைய புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக குருவிடம் கூறிய போலீசார் அவரை வேனில் ஏற்றினர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பாமகவின் முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications