பாமகவினர் சாலை மறியல், உண்ணாவிரதம், கல்வீச்சு
அரியலூர்: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் சென்னையில் பாமகவினர் போராட்டம், சாலை மறியல், கல்வீச்சு ஆகியவற்றில் இறங்கினர். கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பாமகவினர் கல்வீச்சில் இறங்கினர். இதில் ஒரு பேருந்து சேதமடைந்தது.
சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே பாமகவினர் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதை போலீஸார் அனுமதிக்காமல் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூரிலும் பாமகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் தி.நகர், அம்பத்தூர்ஆகிய பகுதிகளில் பாமகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரியில் ..
புதுச்சேரியில், பஸ் நிலையப் பகுதியில் பாமகவினர் கூடி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு பாமக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
மதுரையில் ..
மதுரையில், மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்வேல் தேவர் தலைமையில் 14 பேர் அண்ணா நகர் பகுதியில் கூடி ஊர்வலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
நெல்லையில் ..
நெல்லையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாமகவினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பாமக தலைவர் பிச்சையா பாண்டியன் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications