தமிழக அரசு பஸ் டிக்கெட்டுக்களில் தமிழ் மாயம்!
சென்னை: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சியிலிருப்பவர்கள் முழங்கினாலும் இருக்க வேண்டிய இடத்தில் தமிழ் இல்லாமல் போவது கண்டு தமிழ் ஆர்வலர்கள் வருந்துகின்றனர்.
தமிழக அரசு பஸ்களில் தரப்படும் பயணச் சீட்டில்கூட தமிழ் இல்லையென்றால் வேதனை இருக்கத்தானே செய்யும்?
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றில் 29.6.2008-ல் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்துக்குப் பயணம் செய்த மயிலாடுதுறையைச் சேர்ந்த இரா. இராஜேந்திரன், தான் வாங்கிய பயணச் சீட்டை தினமணி அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். ரூ.11.50 என பயணக் கட்டணம் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்யும் ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டும் அச்சிடப்பட்டுள்ளன.
கையடக்க இயந்திரம் மூலம் பயணச்சீட்டு தரத் தொடங்கியதில் இருந்தே ஆங்கிலத்தில் மட்டுமே ஊர் விவரம் குறிப்பிடப்படுகிறது.
கர்நாடக மாநில பஸ் ஒன்றில் அதே நாளில் பயணம் செய்த மற்றொரு பயணி வாங்கிய பயணச் சீட்டையும் இராஜேந்திரன் அனுப்பியுள்ளார். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்வதற்கான அந்த பயணச் சீட்டில் ஊர் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமின்றி கன்னட மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது.
வெளியூர் பஸ்களில் மட்டும் இந்த நிலை இல்லை. சென்னை மாநகர பேருந்துகளிலும் இப்போது கையடக்க இயந்திரம் மூலம்தான் டிக்கெட் தருகின்றனர். அதிலும் கூட தமிழைக் காண முடியவில்லை.
பிராந்திய மொழிகளில் ஊர்களின் பெயர்களை அச்சிட்டு வழங்கும் வசதி இந்தப் பயணச்சீட்டு கருவிகளில் இருக்கிறது என்பது கர்நாடக டிக்கெட் மூலம் உறுதியாகிறது. இந் நிலையில் தமிழில் ஊர்ப் பெயரை அச்சிடுவது பற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்று தமிழ் ஆர்வலர்கள் வினா எழுப்புகின்றனர்.
நாடு முழுக்க தபால் நிலையங்களில் பயன்படுத்தப்படும் மணியார்டர் படிவத்தைத் தமிழில் வழங்க வேண்டும் என போராடிப் பெற்றது தமிழகம். அதற்காகப் போராடியவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன்.
மத்திய அரசே தமிழகத்துக்காக இறங்கி வந்த நிலை அப்போது இருந்தது.
இப்போது தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் அந்த அக்கறை ஏன் வரவில்லை என்று தமிழ் அறிஞர்கள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.
'முத்தமிழறிஞர்' கவனிப்பாரா?












Click it and Unblock the Notifications