ஜி-8 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் கிளம்பினார் மன்மோகன்
ஜப்பானில் ஜி-8 எனப்படும் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் புற உறுப்பு நாடுகளாக உள்ளன.
ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை மன்மோகன் சிங் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். 3 நாட்கள் அவர் ஜப்பானில் இருப்பார்.
தனது 3 நாள் பயணத்தின்போது 2 முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கிறார் மன்மோகன் சிங். புதன்கிழமை காலை 7.40 மணிக்கு முதலில் சந்திப்பார்கள். பின்னர்கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து காலை சிற்றுண்டி விருந்தின்போது மீண்டும் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஜப்பான் பயணம் குறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில், இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்துவேன்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க எண்ணை வள நாடுகளும், அதை பயன்படுத்தும் நாடுகளும் கூட்டாக நடவடிக்ைக எடுக்க வேண்டிய அவசியத்தை மாநாட்டின்போது வலியுறுத்துவேன்.
உலக வெப்பமயமாதலைத் தடுத்தல் குறித்தும் பேசவுள்ளேன். நமது நாட்டின் முக்கிய நோக்கமாக வறுமையை ஒழித்தல் உள்ளது. அதற்கு விரைவான, நீடித்த பொருளாதார வளர்ச்சி அவசியத் தேவையாகும் என்று கூறியுள்ளார் பிரதமர்.
ஜி-8 அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதுதவிர புற உறுப்பு நாடுகளாக இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.