ஆதரவு வாபஸ்-10ம் தேதி ஜனாதிபதியிடம் இடதுசாரிகள் கடிதம்

'கெடு' இன்று முடிந்தது:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க இடதுசாரிக் கட்சிகள் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைந்தது.
மீண்டும் பேசலாம்-காங். அழைப்பு:
இந் நிலையில் அணுசக்தி விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மத்திய அரசு இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இடதுசாரி கட்சிகள் மத்திய அரசிற்கு அனுப்பிய கடிதத்திற்கு, மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் இடதுசாரி கட்சிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
எச்சரிக்கையை மீறிய பிரதமர்:
ஜப்பான் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேசக் கூடாது என இடதுசாரிகள் எச்சரித்திருந்தனர். ஜப்பான் போகக் கூடாது, சர்வதேச அணு சக்தி கவுன்சிலை இந்தியா அணுகுவது குறித்து 7ம் தேதிக்குள் விளக்க வேண்டும் என்று கூறி பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால் இந்தக் கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை. மேலும் இடதுசாரிகளின் எச்சரிக்கையையும் மீறி பிரதமர் ஜப்பான் கிளம்பிவிட்டார்.
இந் நிலையில் 10ம் தேதி ஆதரவு வாபஸ் கடிதத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் வழங்கப் போவதாக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேப்ரதா பிஸ்வாஸ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் 4 இடதுசாரிக் கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துவிட்டதாக அவர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் இடதுசாரிகளின் ஆதரவு வாபஸால் மத்திய அரசு கவிழும் நிலை நீங்கி விட்டது. இதனால் இடதுசாரிகளின் முடிவு முன்பு ஏற்படுத்திய பரபரப்பும், பதட்டமும் இப்போது இல்லை.
இந் நிலையில் இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் மீண்டும் பேச்சு நடத்த மத்திய அரசு விடுத்துள்ள அழைப்பு குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications