பொன்முடி மீது கேஸ் போடுவேன்-விஜயகாந்த்
சென்னை: புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியை எனக்கு சொந்தமானது என்று கூறியிருப்பதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக நான் விடுத்த அறிக்கையில் எந்த பிரிவினருக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை என்று கூறியிருந்ததை கல்வி அமைச்சர் வேண்டுமென்றே தன் வசதிக்காக புறக்கணித்துவிட்டார்.
அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கல்லூரிகள் தனியார் பல்கலைக் கழகங்களாகவும், அரசு பல்கலைக் கழகங்களாகவும் மாறும் பொழுது பாதிப்பு ஏற்படுமா? என்பதே கேள்வி.
ஆசிரியர் நியமனங்களிலும், பணி நிலைமைகளிலும், ஊதிய விகிதங் களிலும் அரசு தரும் பாதுகாப்புகள் தனியார் பல்கலைக்கழகங்களில் கிடைக்குமா? இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுமா? தற்போது இலவச கல்வியாக இருப்பது கட்டண கல்வியாக மாறுமா? இல்லையா?.
இதுபோன்று மக்கள் நலன் அடிப் படையில் நான் எழுப்பிய கேள்வி களுக்கு நேரடியாக பதிலளிக்காமல் அமைச்சர் பொன்முடி சுற்றிவளைத்து திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தின் கல்வி வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் நான் பேசுகிறேன் என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.
அரசு நடத்த வேண்டிய கல்வித் துறையை தனியாரிடம் தாரை வார்ப்பது மூலம் தான் இட ஒதுக்கீடு கொள்கை நிறைவேறும் என்கிற வரலாறு எனக்கு தெரியாத ஒன்றுதான். ஆனால் நாங்கள் தமிழகத்தின் வரலாற்றை தெரிந்தவர்கள் மட்டுமல்ல. வருங்கால வரலாற்றையும் உருவாக்குபவர்கள் என்பதை கல்வி அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுவையில் ஒரு மருத்துவக்கல்லூரி எனக்கு சொந்தம் என்றும், அதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், தமிழ்நாடு கல்வி அமைச்சர் சொல்லுகிறார். அங்கே உள்ள மருத்துவக்கல்லூரி என்னுடையது என்பதை பொன்முடி நிரூபிக்க வேண்டும்.
இல்லையென்றால் அவர் மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டி வரும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன். அமைச்சர் என்ற காரணத்தினாலேயே அவர் பேசுவதெல்லாம் உண்மையாகிவிடாது.
ஊழலுக்கு உறைவிடமே திமுகதான். அதற்கு இலக்கண, இலக்கியம் வகுத்ததுதான் திமுக வரலாறு. உயர் கல்வி சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களுக்கும் விலக்கி வைக்கப்பட்ட வர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் கல்வி அமைச்சரின் இன்றைய போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளது.
தேமுதிக இன்று வளருகிறது என்றால், ஊழலை அது மட்டுமே ஒழிக்கும் என்று மக்கள் நம்புவதுதான். ஒரு கட்சியை ஆரம்பித்து விடலாம். ஆனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு மக்கள் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவு தேமுதிகவிடம் உள்ளது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.