காடுவெட்டி குரு மீது மேலும் 2 வழக்குகள்

காடுவெட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் குணசேகரன் (முன்பு பாமகவில் இருந்தவர்) என்பவரை கொலை செய்வதாக மிரட்டியதாக மீன்சுருட்டி காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது மேலும் இரு வழக்குகள் பாய்ந்துள்ளன.
பாமக முன்னாள் மாநில மகளிரணி செயலாளர் செல்வி செல்வம். இவர் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக பாமகவிலிருந்து நீக்கப்பட்டவர்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர், கடந்த மார்ச் 10ம் தேதி அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு காடுவெட்டி குரு, பாமக ஒன்றிய செயலாளர் கொழஞ்சி, அரியலூர் மாவட்ட செயலாளர் வைத்தி ஆகியோர் உட்பட 7 பேர்தான் காரணம் செல்வி செல்வம் புகார் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து காடுவெட்டி குருவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பாமகவும், திமுகவும் உறவு கொண்டிருந்ததால், அவர் இதுவரை கைது செய்யப்படாமல் இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் காடுவெட்டி குருவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதேபோல, ஆண்டிமடம் திமுக எம்.எல்.ஏ சிவசங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசியது தொடர்பாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து திருச்சி சிறையிலிருந்து காடுவெட்டி குருவை பலத்த பாதுகாப்புடன் அரியலூர் கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு வந்தனர்.
நீதிமன்ற வளாகத்திலும் பெருமளவில் லீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். காடுவெட்டி குரு வருகையையொட்டி பெருமளவில் பாமகவினர் கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
கோர்ட்டில் குருவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது குணசேகரனும் செல்வி செல்வமும் நீதிபதி முன்பு தலா ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், குரு மீது நாங்கள் புகார் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து குருவை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது வக்கீல்கள் நீதிபதி விஜயராணியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை நீதிபதி நிராகரிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து குரு மீதான இரு புதிய வழக்குகளிலும் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணைக்கு குருவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உடையார்பாளையம் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி 2 நாள் காவலில்குருவை கொண்டு செல்ல அனுமதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து குருவுடன் போலீஸார் வெளியே வந்தனர். அப்போது அவரது வக்கீல்கள், குருவை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதிலளிக்க போலீஸார் மறுத்தனர். இதையடுத்து குருவை கொண்டு செல்ல விட மாட்டோம் என்றுகூறி வக்கீல்களும், பாமகவினரும் வேன் முன்பு மறியல் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீஸார் தடியடி நடத்தினர். இதையடுத்து பாமகவினர் சிதறி ஓடினர். அதன் பின்னர் குருவுடன் போலீஸார் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். போலீஸ் தடியடியில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் அரியலூரில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன.
குருவுக்கு வசதி-பாமக வழக்கு:
இந் நிலையில் சிறையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள குருவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட பாமக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், காடுவெட்டி குரு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது போலீஸ் பாதுகாப்பில் அவர் அனுப்பப்பட்டுள்ளார்.
ஆனால் அவரை போலீஸார் எங்கு வைத்துள்ளனர், எங்கு வைத்து விசாரித்து வருகின்றனர் என்பது தெரியவில்லை. குருவுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என டிஜிபி, அரியலூர் எஸ்.பி, மீன்சிருட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
குருவுக்கு நல்ல குடிநீர், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
மேலும், குருவைப் பார்க்க வந்த பாமகவினர் மீது அரியலூர் கோர்ட் வளாகத்தில் சரமாரியாக தடிகளால் அடித்து படுகாயப்படுத்திய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸாரின் தாக்குதலில் சிக்கி பல பெண்கள் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்குஉரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி குலசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இதை விசாரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து நாளை முடிவு சொல்வதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications