தமிழ்ப் புத்தாண்டு மாற்ற சட்டம்: எதிர்த்த வழக்கு தள்ளுபடி
டெல்லி: ஜனவரி 15ம் தேதி தமிழ் புத்தாண்டு என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்குப் பதில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்தவரான, பொது நலன் மனுக்களை தாக்கல் செய்வதில் பிரபலமான டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், ஜே.என். பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், டிராபிக் ராமசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து விட்டதாக கூறி ராமசாமிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முதலில் இந்த மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது மசோதா அளவிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிரச்சினை இருந்தது. ஆனால் அந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் பர்னாலாவும் அதற்கு அங்கீகாரம் கொடுத்து சட்டமாக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் அரசிதழிலும் இது வெளியாகி விட்டது.
எனவே இந்த சட்டம் செல்லுமா, இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில்தான் மனுதாரர் முதலில் வழக்கு தொடர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பின்னர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அபராதத் தொகையை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.