தொழிற்சங்க அங்கீகாரம்-பாமகவுக்கு என்எல்சி எச்சரிக்கை
நெய்வேலி: பல்வேறு தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு பாமக தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் அதன் அங்கீகாரம் மறு பரிசீலனை செய்யப்படும் என நெய்வேலி அனல்மின் கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.
போனஸ் மற்றும் போக்குவரத்துப் படி உள்ளிட்டவை தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி அதற்கானத் தொகையை நிலுவைத் தொகையுடன் வழங்க வலியுறுத்தி பாட்டாளித் தொழிற்சங்கம் தலைமையிலான 12 தொழிற்சங்க கூட்டமைப்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அது எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பாமக தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையில் இல்லாத சங்கங்களை இணைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதால் அதன் அங்கீகாரத்தை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று என்.எல்.சி. நிர்வாகம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
என்.எல்.சி.யில் தற்போது திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) மற்றும் பாமகவின் பாட்டாளி தொழிலாளர் சங்கம் ஆகியவை மட்டுமே அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.