சுய உதவிக்குழு பெண்களிடம் ரூ.30 லட்சம் மோசடி
வள்ளியூர்: நெல்லை அருகே சுய உதவுக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம் தங்க பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இதுபற்றிக் கூறப்படுவதாவது:
நெல்லை மாவட்டம் காவல் கிணறு அருகே உள்ள லெப்பை குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால். செங்கல், ஓடு விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அன்னபாய்.
இவர்கள் பணகுடி, லெப்பை குடியிருப்பு, ஆவரைகுளம் பகுதிகளில் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் சிலரிடம் வெளிநாட்டில் இருந்து தங்க பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். ஆனால், தங்க பிஸ்கட் வாங்கி கொடுக்கவில்லை.
மேலும் ஏலச்சீட்டு நடத்தி அந்த பணத்தை திருப்பித் தராததாலும், சிலரிடம் நகை உள்ளிட்ட பொருள்களையும், வாங்கி மோசடி செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் ஜெயபால்-அன்னபாய் இருவரும் திடீரென ஊரை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் ஏமாந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து பணகுடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பணத்தை மீட்டு தருமாறு அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.