தங்கபாலுவை எதிர்த்து த.மா.கா. கொடியேற்றி வாசன் ஆதரவாளர்கள் போராட்டம்
ஓமலூர்: கே.வி.தங்கபாலு, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே உள்ள ஓமலூரில், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியேற்றி தங்கபாலுவை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவராக சேலம் எம்.பி. கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தங்கபாலுவின் சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓமலூரில் வாசன் ஆதரவாளர்கள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
மூப்பனார் உருவாக்கி, பின்னர் ஜி.கே.வாசனால் மூடு விழா கண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், தேர்தலில் ஜெயித்த பிறகு தொகுதிப் பக்கமே வராத ஒரு தலைவர் தங்கபாலு. மக்கள் ஆதரவே இல்லாத அவரை தலைவராக ஏற்கவே முடியாது. மக்கள் ஆதரவு பெற்ற வாசன் தலைவராக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் த.மா.கா மீண்டும் உதயமாகும் என்றனர்.
வாசன் ஆதரவாளர்களின் இந்தப் போராட்டத்தால் சேலம் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
இன்று பதவியேற்பு:
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவராக தங்கபாலு இன்று பதவியேற்றுக் கொள்கிறார். அவரிடம் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ள கிருஷ்ணசாமி பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
காலை 9 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தலைவராகப் பொறுப்பேற்றவுடன் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை தங்கபாலு சந்திக்கிறார்.
பின்னர் காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் சிலைகளுக்கு அவர் மாலை அணிவிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications