புஷ்-மன்மோகன் சிங் சந்திப்பு: 'அணு ஒப்பந்தம் முக்கியமானது'
டோயோகோ நகருக்கு உள்ள மெளன்ட் போரோமாய் என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் வின்ட்சரில் இந்த சந்திப்பு நடந்தது. இரு நாடுகளும் மேலும் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும், பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அப்போது இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் இந்த சந்திப்புநடந்தது. பின்னர் இருவரும் புன்னகை தவழும் முகத்துடன் செய்தியாளர்களை சந்தித்தனர். மன்மோகன் சிங் முகத்தில் கூடுதல் உற்சாகத்தைக் காண முடிந்தது.
மன்மோகன் சிங் கூறுகையில், இரு நாட்டு உறவுகளும் திருப்திகரமான வகையில் உள்ளன. அணு சக்தி, பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, கல்வி பரிமாற்றத் திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நிறைய முன்னேற்றமும், ஒத்துழைப்பும் அதிகரித்துள்ளது.
2005ம் ஆண்டு ஜூலை மாதம் நாங்கள் முதன் முதலில் சந்தித்தபோது இருந்ததை விட தற்போது உறவு நன்கு மேம்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நமது உறவு வலுப்பட்டிருப்பதற்காக அதிபர் புஷ்ஷுக்கு நான் தனிப்பட்ட முறையிலும், இந்தியமக்கள் சார்பிலும் நன்றி கூறிக்கொள்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவுவது பெருமை தருகிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு துறைகளிலும் தோளோடு தோள் சேர்ந்து செயல்பட வேண்டும். அது நடக்கப் போகிறது என்றார். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மன்மோகன் சிங் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் புஷ் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் குறித்துப் பேசினோம். இரு நாடுகளுக்கும் அது மிகவும் முக்கியமானது என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இரு நண்பர்களுக்கிடையிலான சந்திப்பு இது. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வாய்ப்புகள், பிரச்சினைகள், பரஸ்பர மரியாதைகள் குறித்து விவாதித்தோம். பிரதமர் மன்மோகன் சிங்கை நான் மிகவும் மதிக்கிறேன். இந்தியாவை அதை விட மதிக்கிறேன்.
இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது இரு நாடுகளுக்கும் முக்கியமாஐனது. பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியாவுக்கு ஒரு நண்பனாக அமெரிக்கா விளங்கும். தொடர்ந்து இரு நாடுகளும் நண்பர்களாக திகழ வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமைத்துவம் குறித்து பெருமைப்படுகிறேன். எங்களுக்கு இடையே இன்று நடந்த பேச்சு மிகவும் திருப்திகரமானதாக இருந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் என்றார்.