மோடிக்கு அமெரிக்கா மீண்டும் விசா மறுப்பு
கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்கா செல்ல சுற்றுலா விசா கோரி மோடி விண்ணப்பித்தார். ஆனால் குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி அவருக்கு விசா தரக் கூடாது என மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மோடிக்கு விசா தர அமெரிக்க அரசு மறுத்து விட்டது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்திய அரசும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார் மோடி. நியூஜெர்சியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள குஜராத் கலாச்சார மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள சுற்றுலா விசா கோரி மோடி மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அவருக்கு விசா வழங்கக் கூடாது என்று முன்பு எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காரணம் காட்டி மீண்டும் மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி பெலிஸ் கெயர் கூறுகையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே குடியேற்ற சட்டத்தின் கீழ் சுற்றுலா விசா வழங்க இயலவில்லை என்று மோடிக்குத் தெரிவித்து விடுமாறு அமெரிக்க குடியேற்றத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள், வன்முறை புகார்களை பொய் என்று நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் தான் சுற்றுலா விசாவில் அமெரிக்க வர தகுதியானவர் என்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அவர் நிரூபிக்க வேண்டும் என்றார் கெயர்.