நாடாளுமன்றத்தில் 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு?!
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்ட நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்தார்.
அப்போது, லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர தனது அரசு தயாராக இருப்பதாகவும், தனது அரசுக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் பிரதமர் தெரிவித்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கு கோருவற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான தேதியை வெள்ளிக்கிழமை மாலைக்குள் தெரிவிப்பதாகவும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் தெரிவித்தார் என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஜூலை 21ம் தேதி கூடும் என தெரிய வந்துள்ளது. 22ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகிறது.
இந் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள் வெளிநாட்டுப் பயணம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இன்று காலை பிரதமரின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாலையில் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.