மாயாவதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முடுக்கி விடும் சிபிஐ!
டெல்லி: முலாயம் சிங் கட்சியை உடைக்கப் பார்க்கிறார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், உ.பி. முதல்வர் மாயாவதி மீதான பிடியை திடீரென சிபிஐ இறுக்க ஆரம்பித்திருக்கிறது.
மத்தியில், பிரதமர் மன்மோகன் சிங் அரசைக் காக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு முக்கிய முயற்சியாக சமாஜ்வாடியின் ஆதரவை காங்கிரஸ் பெற்றது. ஆனால் திடீரென சமாஜ்வாடிக் கட்சியை மாயாவதி உடைக்க முயல்வதாகவும், 12 எம்.பிக்கள் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தப் பின்னணியில் மாயாவதி மீதான வழக்கை திடீரென சிபிஐ முடுக்கி விட்டுள்ளது.
மாயாவதி மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாயாவதி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதில் நேற்று சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாயாவதி மீதான புகார்களுக்கு போதிய ஆதாரம் உள்ளது. தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, டெல்லி, லக்னோ மற்றும் உ.பியில் உள்ள சொந்த கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.
இந்த வழக்கில் மாயாவதி மீதான விசாரணை முடிவடைந்து விட்டது. எனவே அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயாவதி மீதான பிடியை சிபிஐ திடீரென இறுக்க ஆரம்பித்திருப்பதற்கு அரசியல் காரணம் கற்பிக்கப்படுகிறது. இன்னொரு பெரும் வழக்கமான தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கிலும் மாயாவதி சம்பந்தப்பட்டுள்ளார். அடுத்து அந்த வழக்கையும் சிபிஐ கையில் எடுக்கும் எனத் தெரிகிறது.
மாயாவதி மீதான இந்த நடவடிக்கை காரணமாக டெல்லி மற்றும் உ.பி. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.