ஒரு பள்ளி - 2 ஆசிரியர்கள் - 8 மணி வரைக்கும் பாடம்!
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்களே உள்ளதால் இரவு 8 மணி வரை வகுப்பு நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் பஞ்சாயத்து யூனியனை சேர்ந்தது கண்டரமாணிக்கம். இங்கு மெ.ஆ.பி. பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியாக 1969ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த 28 ஆண்டுகளாக நிர்வாகம் செயல்படவில்லை. இதன் காரணமாக பள்ளியில் ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. தற்போது 2 ஆசிரியைகள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால், மாணவிகளோ 234 பேர் உள்ளனர். இதில் ஒரு ஆசிரியை அலுவலக வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.
மீதமுள்ள ஒரு ஆசிரியை, பள்ளியில் பயிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்த ஒரு ஆசிரியரே அனைவருக்கும் பாடம் நடத்தினால் மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்படும் எனறு பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி கிராம மக்கள் போராட்டக் குழு அமைத்து போராடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலு, இளங்கோ ஆகியோர் கூறுகையில், கடந்த 28 ஆண்டுகளாக ஒரு சில பிரச்சினையால், இந்த பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் பணி ஒய்வு மற்றும் மாறுதல் காரணமாக தற்போது ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
கிராமமக்களின் நிதி உதவி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் மாதம் ரூ.10 அல்லது ரூ.15 பெற்று அந்த கிராமத்தில் படித்த பெண்களை கொண்டு மாணவிகளுக்கு பாட ம்சொல்லிக் கொடுக்கப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவிகளிடம் பணம் பெறக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டார். இதன் காரணமாக வேறு ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தலைமமை ஆசிரியையும், ஒரு ஆசிரியையும் இணைந்து கடந்த ஆண்டு இரவு 8 மணி வரை 10ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி 85 சதவீதம் தேர்ச்சி அடைய வைத்தனர். இதே பள்ளியில் கடந்த ஆண்டுகளில் 3 முறை அனைத்து மாணவிகளும் தேர்ச்சி அடைந்து100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகட்டிடமும் சேதம் அடைந்துள்ளது. பள்ளி வளாகத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து காடாக பள்ளி மாறியுள்ளது. மாணவிகள் இயற்கை உபாதைக்காக கழிப்பிடம் இல்லாததால் காட்டுக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே கல்வி அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் இந்த பள்ளியை ஆய்வு செய்து சிறப்பு சட்டபிரிவின் கீழ் தனி அலுவலர் நியமித்து ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என்றனர்.
--












Click it and Unblock the Notifications