பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள் தற்கொலை முயற்சி!
கரூர்: அடிப்படை வசதிகள் செய்து தராத பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பள்ளியைப் பூட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டி கடந்த சில வருடங்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
மேலும், தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும், பள்ளியில் கட்டாய நன்கொடை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், காரணம் இன்றி மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது என்றும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் கரூரில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்கப்படும் துணியை மட்டுமே அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்று சில ஆசிரியர்கள் வற்புறுத்தி ஒவ்வொரு மாணவர்களிடம் ரூ 300 பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். இதற்கு பள்ளி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சில மாணவர்கள் ஒன்று திரண்டு பள்ளி நடைபெறும் சமயத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உள்ளே வைத்து பள்ளி கேட்டை இழுத்து பூட்டினர்.
தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் விரைந்து சென்று பள்ளிக்கு பூட்டு போட்ட பிளஸ் டூ பயிலும் மாணவர்கள் ஜெயராமன் உள்பட முன்று மாணவர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதை கேள்விப்பட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் குமாரசாமி காவல் நிலையம் சென்று ஜெயராமன் உள்பட முன்று மாணவர்களை அழைத்து வந்தார்.
இவர்கள் மறு நாள் பள்ளிக்கு வரும் போது தங்களது பெற்றோர்களை உடன் அழைத்து வர வேண்டும் என்று தலைமை ஆசிரியர் குமாரசாமி உத்தரவிட்டார்.
இதனால் பயந்து போன இந்த மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பே விஷம் அருந்தி வகுப்பு அறையில் வந்து மயங்கி விழுந்தனர்.
உடனடியாக இந்த தகவல் தலைமை ஆசிரியர் குமாரசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே வகுப்புக்கு வந்து விஷம் அருந்திய மாணவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த பள்ளி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்தனர்.
இச் சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.