திமுகவுக்கு ஆதரவு வாபஸா?-தா. பாண்டியன்
சென்னை: அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் திமுக அரசுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று நான் சொல்லவே இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தான் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பாண்டியன், தான் ஒருபோதும் அப்படி கருத்து எதுவும் கூறவில்லை என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்,
திருச்சியில் கடந்த 9ம் தேதி பத்திரிகை நிருபர்களைச் சந்தித்த போது, தமிழகத்தில் திமுக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள இருப்பதாகவும், இது பற்றி மத்திய நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்படும் என்றும் நான் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலைப் பற்றியோ, கூட்டணியைப் பற்றியோ எந்த கருத்தையும் நான் வெளியிடவில்லை. கட்சியில் அத்தகைய விவாதமும் இல்லை. வரும் 12 (நாளை), 13ம் தேதிகளில் கூடுகிற மத்திய நிர்வாகக் குழு, அமெரிக்காவுடனான யுரேனிய ஒப்பந்தம் குறித்து எழுந்துள்ள அரசியல் பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதற்காக கூடுகிறது; தேர்தல் கூட்டணி பற்றி விவாதிப்பதற்காக இல்லை.
கட்சித் தோழர்கள், தேர்தல் கூட்டணி குறித்து எவ்வித கருத்தையும் வெளியிட வேண்டாம், என்று பாண்டியன் கூறியுள்ளார்.