தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி-கார்த்திக் கட்சி பிரமுகர் மீது வழக்கு
நெல்லை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்வர ரெட்டி என்ற தொழிலதிபரிடம் ரூ.2 கோடியை கமிஷன் என்ற பெயரில் மோசடி செய்ததாக, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி மாநில பொதுச் செயாளர் சேதுராமபாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஐதாராபத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வர ரெட்டி. இவர் ஐதாராபத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தாத்திரி குருப் ஆப் கம்பெனியின் தலைவராக உள்ளார்.
இவருக்கு தனது நிறுவனத்தை மேம்படுத்த ரூ.100 கோடி கடன் தேவைப்பட்டது. இதற்காக நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தை சேர்ந்த சேதுராமபாண்டியனை அணுகினார்.
அதற்கு அவர் கேரளாவைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரிடமிருந்து ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாகவும், கமிஷனாக தனக்கு ரூ.2 கோடி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த வெங்கடேஷ்வர ரெட்டி உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்து அதனை சேதுராமபாண்டியன், ராமகிருஷ்ணன், கோவிந்தசாமி ரெட்டி, சிவகுமார், காரைக்குடியை சேர்ந்த எஸ்ஆர் தேவர், சேதுராமபாண்டியனின் பேரன் மூர்த்தி அவரது உதவியாளர் ராஜேஷ் ஆகியோரிடமும் கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சேதுராமபாண்டியன் பல மாதங்களாகியும் ரூ.100 கோடி கடன் வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் வெங்கடேஷ்வர ரெட்டிக்கு சேதுராமபாண்டியன் உள்ளிட்டோர் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர் தான் கமிஷனாக கொடுத்த ரூ.2 கோடியை திருப்பி கேட்டார். ஆனால் சேதுராமபாண்டியன் உள்ளிட்ட 7 பேரும் அதற்கு முறையான பதில் தெரிவிக்காமல் காலம் கடத்தினர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெங்கடேஷ்வர ரெட்டி இந்த மோசடி தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில் மாநகர குற்றபிரிவு போலீஸ் விசாரணை நடத்தி சேதுராமபாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் எஸ்ஆர் தேவர் மட்டும் போலீஸ் பிடியி்ல் சிக்கியுள்ளார்.
அவரி்டம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. போலீசார் தேடுவதை அறிந்த சேதுராமபாண்டியன் உள்ளிட்ட 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக அவர்கள் கோர்ட் மூலம் முன்ஜாமீன் பெரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
சேதுராமபாண்டியன் பார்வர்டு பிளாக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். கார்த்திக் அக்கட்சியில் இருந்து விலகியதும் தனும் அதில் இருந்து விலகினார். பின்னர் நாடாளும் கட்சியை கார்த்திக் துவங்கியபோது அந்த கட்சியின் மாநில பொது செயலாளராக சேதுராமபாண்டியன் நியமிக்கப்பட்டார்.
அவரது பேரன் மூர்த்தி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications