ஊழியர்கள் மோதல் - ரயில்வே அலுவலகம் சூறை
செங்கோட்டை ரயில் நிலையத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்ஆர் எம்யூ) சார்பில் ரயில்வே தொழிலாளர்கள் விரோத 6-வது ஊதிய குழு பரிந்துரைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் 1 மணி அளவில் தலைவர் எம்.மணி என்பவர் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் என்.கல்யாணி முன்னிலை வகித்தார். மதுரை கோட்ட யூனியன் உதவி செயலாளர் டி.ரவிசந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் சங்கத்தினர் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.
இதில் ஒரு அணியினர் செக்சன் என்ஜீனியர் அலுவலகம் நோக்கி சென்றுள்ளனர். அங்கிருந்த நோட்டீஸ் போர்டில் டிஆர்இயூ சங்கத்தினர் எஸ்ஆர்எம்யூ யூனியன் பொது செயலாளர் கன்னையாவை பற்றி ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தனர். மேற்படி போஸ்டரில் அவதூறான வார்த்தைகள் இடம் பெற்றிருந்தை கண்டவர்கள் அந்த போஸ்டரை கிழித்துள்ளனர்.
அப்போது இரு சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில் டிஆர்இ யூனியன் பொறியாளர் ராஜமணிக்கம், ஸ்டோர் கீப்பர் தர்மராஜ், மேஸ்த்திரி முத்துசாமி, எஸ்ஆர்எம் யூனியை சேர்ந்த ஆல்வின் பெரியராஜா, அழகர், பாலகிருஷ்ணன் ஆகியோரும் காயமடைந்தனர்.
மோதலில் அலுவலகத்தின் இரு ஜன்னல் கண்ணாடிகள், சேர், டேபிள், பிளாஸ்டிக் சேர்கள், அலுவலக பொருட்கள், பைல்கள் ஆகியவை உடைத்தும், தூக்கி வீசப்பட்டும் போர்களம் போல் காணப்பட்டது.
ரயில்வே யூனியன்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த 6 பேர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications