ஆதரவு வாபஸ் ஏன்? இடதுசாரிகளின் விளக்க பிரசாரம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிச கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை இணைந்து இந்த விளக்கப் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அணு ஒப்பந்தத்தின் மீதே அதிக கவனம் செலுத்தி வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டது.
விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. பண வீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. தேசியநலனை கருத்தில் கொள்ளாமல், பொது குறைந்தபட்ச திட்டத்தை கண்டு கொள்ளாமல் நடந்து வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த இடதுசாரிகள் கூறிய ஆலோசனைகளையும், யோசனைகளையும் மத்திய அரசு முற்றாக நிராகரித்து விட்டது. அதேபோல விலைவாசி உயர்விலும் இடதுசாரிகளின் யோசனைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கவில்லை.
அமெரிக்க ஆதரவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்விகள், தவறுகள், மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில், இன்ன காரணத்திற்காகத்தான் எங்களது ஆதரவு திரும்பப் பெறப்பட்டது என்பதை விளக்கும் முகமாகவும் இந்த விளக்கப் பிரசாரம் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் அணி சேராத, பிற ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளையும் எங்களுடன் அணி திரட்ட முயன்று வருகிறோம்.
காங்கிரஸ், பாஜக அல்லாத அணிதான் சரியான மாற்றாக இருக்க முடியும். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.
அரசு தற்போது கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகள், விவசாயிகளுக்கு எதிரானது, கிராமப்புற மக்களுக்கு எதிரானது, தொழிலாளர்களுக்கு விரோதமானது, நலிவடைந்த பிற பிரிவினருக்கு விரோதமானது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதுதான் காங்கிரஸுக்கு முதன்மையான பிரச்சினை. மற்றபடி விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றார்.
--